tamilnadu

img

காவிரியோடு வைகையும் குண்டாறும் இணைந்தால்... - ஐ.வி.நாகராஜன்

மக்களிடம் செல், கற்றுக்கொள் என்றார் தோழர் மா சே துங். மக்களிடம் செல்வதும் கற்றுக் கொள்வதும் அவர்களுக்காக போராடுவதும் என்பதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்ட வழி. அதன் அடிப்படையில் பல நடைபயணங்களை இடதுசாரி இயக்கங்கள் நடத்துகின்றன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குன்றாண்டார்கோயில் ஒன்றியக்குழு சார்பில் 22 நாட்கள் முன் தயாரிப்புடன் பல ஆயிரக்கணக்கான துண்டு பிரசுரங்கள், அதை தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய போஸ்டர்கள் என ஊராட்சிகள், கிராமங்கள், தெருக்களில் பிரச்சாரங்கள் மற்றும் நடைபயணத்தை வெற்றிகரமாக நடத்திடுவதற்கான நிதி திரட்டல் என்ற முறையில் இரவு பகல் பாராமல் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், கட்சி உறுப்பி னர்கள், வெகுஜன அமைப்பின் தோழர்கள் எல்லா கிராமங்களுக்கும் சென்று மக்களை சந்தித்தனர். நடைபயணம் குறித்த விபரம் கிராமப்புறங்களுக்கு சென்றடைந்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர் தலைமையில் மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.தங்கவேல், எஸ்.பீமராவ் உள்ளிட்டோர் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இந்த பணியை பார்த்த பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பு களைச் சார்ந்த பிரமுகர்கள், நாம் எல்லோரும் சேர்ந்து இந்த இயக்கத்தை நடத்திடலாமே, எங்களையும் அழைத் தால் நாங்களும் வருவோமே என்று கூறினார்கள்.இப்படித்தான் இந்த பயணம் துவங்கியது.

காவிரியை வைகையோடு இணைத்தால்...

காவிரி நதியை வைகை மற்றும் குண்டாறு நதிகளோடு இணைக்கும் திட்டம் ரூ. 3 ஆயிரத்து 290 கோடியில் நிறை வேற்றலாம் என்று 2008-ல் திட்டமிடப்பட்டது. இதன் மூலம் புங்கா ஆறு, நாப்பண்ணை ஆறு, அரியாறு, காரையாறு, அக்கினி ஆறு, கொண்டாறு, வெள்ளாறு, பம்மாறு, விருசுழி ஆறு, மணிமுத்தாறு, சருகனி ஆறு, உப்பாறு, வைகை, கிருதுமால்நதி, கானல் ஒடை என 15 ஆறுகளை இணைக்கும் வாய்ப்பு ஏற்படும். அவ்வாறு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் முதல் பயனாக காவிரி டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாயம் நீங்கும். இதில் கிடைக்கும் உபரிநீர் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள சுமார் 8 லட்சம் ஏக்கர் பாசன நிலம் விவசாய சாகுபடிக்கு பெருமளவில் பயன்பாடு உள்ளதாக இருக்கும். இதன் மூலம் 50 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். மேலும் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும்.

இந்த 7 மாவட்டங்களிலும் குடிநீர் பிரச்சனை வராது. இந்த மாவட்டங்களை ஒட்டியுள்ள இதர மாவட்டங்களும் பயன் பெறமுடியும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தை அரசு நிறைவேற்றுவது மிக எளிதுதான். ஆனால் இந்த பிரச்சனைக்காக மார்க்சிஸ்ட் கட்சி போராடும் ஒவ்வொரு முறையும் அதிகாரிகளும் அமைச்சர்களும் அரசுக்கு பரிந்துரைப்பதாகவே தெரிவித்து வந்துள்ளனர். பிறகு கிடப்பில் போட்டு விடுகின்றனர். காவிரி- வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பலகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்தக் கோரிக்கை, புதுக்கோட்டை மாவட்ட மக்களின்- விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கை ஆகும். அதே போல், குன்றாண்டார் கோயில் ஒன்றியத்தில் மொத்தம் 568 ஏரி,குளங்கள் உள்ளன. இவை  எந்த காலத்திலும் தூர்வா ரப்படுவதில்லை. தப்பித் தவறி தூர்வாரினால் அரையும்,  குறையுமாகத்தான் நடைபெறுகின்றது. இதன் விளைவாக நீர் ஆதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டு மழைக்காலங்களில் தண்ணீர் தேங்க வழியின்றி வீணாக கடலில் கலக்கும் நிலை உள்ளது.

அதுமட்டுமில்லாமல், பல்வேறு கிராமங்களில் குடிநீரில் உப்புநீர் கலந்து நூற்றுக் கணக்கானோருக்கு சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 25க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர் போராட்டத்தின் விளை வாக ஒரு புதிய சுத்திகரிப்பு ஆலைக்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இன்னொருபுறம் விவசாயம் முற்றிலும் அழிந்துவிட்ட நிலையில், சிறு குறு விவசாயிகள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அதோடு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக குடிமனைப்பட்டா இல்லாமல் தொடர்ந்து மனு கொடுத்து பார்த்துவிட்டு கிராமப்புற ஏழை மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இளைஞர்களு க்கு வேலை வாய்ப்பு இல்லாமல் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. 

242 குக்கிராமங்கள் வழியாக...

இந்த பின்னணியில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக் குழுவின் வழிகாட்டு தலோடு குன்றாண்டார் கோவில் ஒன்றியத்தில் கிள்ளுக் கோட்டை, மின்னாத்தூர், அண்டகுளம் ஆகிய மூன்று மையங்களிலிருந்து 105 கிலோமீட்டர் தொடர் நடை பயணம் நவ.24 அன்று நடைபெற்றது. 37 ஊராட்சிகளி லும் 242 குக்கிராமங்கள் வழியாக இந்த நடைபயணம் பயணித்தது.  வழிநெடுகிலும் பல்வேறு கிராமங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள், சென்ற கிராமங்களிலெல்லாம் திமுக, நாம் தமிழர் கட்சி, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் மற்றும் பல கட்சி சார்புடைய விவசாய சங்க அமைப்புகள் என வரவேற்பு அளித்து ஆதரவு தெரிவித்தனர்.  தேர்தலில் ஓட்டுக்காக மட்டும் சென்ற பல கிராமங்க ளில் நம்முடைய கோரிக்கைகளுக்காகவும் வருவதற்கு இப்படி ஒரு கட்சி இருக்கிறதே என்று தாய்மார்கள், முதிய வர்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் இருகைகளை யும் கூப்பி வணங்கி வரவேற்றனர்.

மூத்த தோழர்களின் மன உறுதி

மூன்று நடைபயண குழுக்களிலும் 70வயதிற்கு மேற்பட்ட மூத்த தோழர்கள் 12 பேர் கலந்து கொண்ட னர். சோர்வடைந்து விடுவார்கள் என்று எண்ணி வாக னங்களில் ஏறி  வருவதற்கு அவர்களிடம் பேசினோம். முடியாது என்று உறுதியாக மறுத்துவிட்டனர். நாங்கள் செத்தாலும் கடைசிவரை நடந்துதான் வருவோம் என்று உறுதிபடக் கூறியதைப் பார்த்து வியந்து போனோம். வீரக்குடி கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர், மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டக்குழு உறுப்பி னர், மிகச் சிறந்த போராளி முருகவேல் உடல்நலக்குறை வால் வீட்டிலிருந்தார். நடைபயண தோழர்கள் வீட்டிற்கு அவரை பார்க்கச் சென்றபோது மிகுந்த உற்சாகத்தோடு நானும் பயணக்குழுவில் பங்கேற்கிறேன் என்று கிளம்பி னார். பரவாயில்லை, உங்கள் வாழ்த்துக்களே போதும் என்று அவர் தோள்களை அணைத்து அவரைப் படுக்கையில் அமரவைத்துவிட்டு தோழர்கள் வந்தனர். இப்படி ஏராளமான தோழர்களின் உற்சாகப் பெருமூச்சும் நெகிழ்ச்சியான சம்பவங்களும் நிறைய உண்டு. 

ராமுடையான்பட்டி, மின்னாத்தூர், பாப்புடையான் பட்டி, பழையூர், தெம்மாவூர், காரடிவயல், குன்றாண்டார் கோவில், நால்ரோடு, ஒடுகம்பட்டி, கீரனூர் ஆகிய கிராமங்களின் வழியாக ஐ.வி.நாகராஜன் தலைமையி லான குழு; அண்டகுளம், பெரம்பூர் விலக்கு, வீரக்குடி, திருப்பூர், வாழமங்களம் வடக்கு, வாழமங்களம் தெற்கு, மோசக்குடி வடக்கு, மோசக்குடி தெற்கு என இன்னும் பல கிராமங்களை நோக்கி எம். சின்னதுரை தலைமையிலான குழு; கிள்ளுக்கோட்டை, கேர்காலனி, மலையடிப்பட்டி, கரியாப்பட்டி, சிவகாமிபுரம், புலியூர், தென்மதுரை, எட்டுக் கால் பட்டி, அண்ணாநகர், பள்ளத்துப்பட்டி விலக்கு, புஷ்பாநகர் ஆகிய கிராமங்கள் வழியாக எஸ்.கவிவர்மன் தலைமையிலான குழுவும் பயணித்தன.  இந்த மூன்று நடைபயண குழுக்களையும் ஏ.ஸ்ரீதர், கே.தங்கவேல், எஸ். பீமராஜ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். கட்சியின் செந்தொண்டர்கள் பயணக்குழுவில் பங்கேற்ற தோழர்க ளுக்கு பல்வேறு வகையான உதவிகள் புரிந்து குழுக்களை வழிநடத்தி சென்றனர். நிறைவாக கீரனூரில் சங்கமித்து அங்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரம் மாண்டமான அந்த பொதுக்கூட்டத்தில் இந்த நடைபயண கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 2020 பிப்ரவரி இறுதியில் குண்றாண்டார் கோயில் ஒன்றியமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு அனைத்து கட்சிகள், அனைத்து அமைப்புகளையும் ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்திட அறைகூவல் விடுக்கப்பட்டது.

இந்த போராட்டம் பற்றி குன்றாண்டார்கோயில் ஒன்றி யத்திலுள்ள அனைத்து கிராமங்களும் பேசுகின்றன. அதே போல் அனைத்து கட்சிகள், அனைத்து விவசாய சங்க அமைப்புகளையும் பேசவைத்துள்ளது. அடுத்த கட்ட போராட்டத்திற்கு அனைத்துப் பகுதி மக்களும் தயாராகி வருகின்றனர். இதுவே இந்த நடைபயண பிரச்சாரத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியும் அங்கீகாரமும் என்பது குறிப்பிடத்தக்கது. 

கட்டுரையாளர் :சிபிஐ(எம்) மாநிலக்குழு உறுப்பினர்